Last Updated : 24 Jan, 2015 11:29 AM

 

Published : 24 Jan 2015 11:29 AM
Last Updated : 24 Jan 2015 11:29 AM

தமிழ் சினிமாவுக்கு ஷங்கர்கள் தேவை: ஒரு மேலோட்ட பார்வை

"ஒரு படம் எடுக்கும் செலவில் அற்புதமான 10 படைப்புகள் தரலாம்."

"பிரம்மாண்டம் என்ற பெயரில் காதில் பூ சுற்றும் வேலை."

"நல்ல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்படுகிறது."

"தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட சினிமாவுக்குத்தான் மதிப்பு."

இவை மட்டுமின்றி... இன்னும் பல ஸ்டேட்மென்ட்கள் அடுக்கப்படுவதைப் பார்க்கிறேன். இவை எல்லாம் இயக்குநர் ஷங்கர் மீதான தீவிர சினிமா ஆர்வலர்கள் பலரது பார்வை. இயக்குநர் ஷங்கரை முன்வைத்துச் சொல்லப்படும் இத்தகைய மிக முக்கியக் கருத்துகள் அனைத்துமே கவனத்துக்குரியதுதான். ஆனால், தமிழ் சினிமாவுக்கு ஷங்கர் போன்ற இயக்குநர்களின் 'தேவை' குறித்து இவர்கள் மேலோட்டமாகவாவது யோசித்துப் பார்த்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

இன்றைக்கு உலக அளவில் தனக்கான இடத்தில் காலூன்றி உறுதியுடன் இருக்கிறது ஹாலிவுட் - அமெரிக்க ஆங்கிலப் படங்கள். இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் ஆதிக்கம் செலுத்துவது, பாலிவுட் - இந்தி சினிமா.

ஹாலிவுட்டில் ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திறமையால்தான் உலக அளவிலான சந்தையை அவர்களால் வசப்படுத்த முடிந்தது. இந்தி சினிமாவும் அப்படித்தான். அவர்களது சினிமா மூலை முடுக்குகளில் சென்றதன் பயனை அவர்கள் மட்டுமா அனுபவிக்கிறார்கள்? வர்த்தக நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட பாதையில் இப்போது பயனடைந்து கொண்டிருப்பவர்கள், சமரசங்களைக் குறைத்துக்கொண்டு பியூர் சினிமா கொடுக்க முயற்சிக்கும் படைப்பாளிகளும்தான்.

எப்படி?

'டெர்மினேட்டர்', 'ராம்போ', 'ஜுராசிக் பார்க்', 'ஸ்பீட்', 'மேட்ரிக்ஸ்', 'மம்மி', 'மிஷன் இம்பாசிபிள்', 'டைட்டானிக்' முதலான படங்கள் பார்த்து ஹாலிவுட் படங்கள் மீது மோகம் கொண்டவர்களில் பலர்தான் பின்னாளில் 'ஏ பியூட்டிஃபுல் மைண்ட்', 'தி பியனிஸ்ட்', 'தி ஏவியேட்டர்', 'பாபெல்', 'கேப்டன் பிலிப்ஸ்', 'ஹெர்' முதலான ஹாலிவுட்டிங் பியூர் சினிமாவைக் கொண்டாடத் தொடங்கினர். இந்த பியூர் சினிமா மீதான ஆர்வம்தான் அவர்களை அடுத்த கட்டமாக, ஈரான், கொரியா முதல் எத்தியோப்பியா வரையிலான உலக சினிமாவுக்குக் கொண்டு செல்கிறது.

இதேபோல், வர்த்தக அம்சங்கள் நிறைந்ததாக சொல்லப்பட்ட பாலிவுட் படங்களின் அறிமுகம்தான், தமிழகத்தில் இன்று திரையரங்கில் அமர்ந்து 'எ வெட்ணஸ்டே', 'தி லஞ்ச் பாக்ஸ்', 'குயின்', 'அக்லி' முதலான நல்ல முயற்சிகளைக் கொண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது.

ஹாலிவுட்டும் பாலிவுட்டும் தமிழகத்தில் காலூன்றுவதற்குக் காரணமாக இருந்தவை, அங்கிருந்து வந்த வியத்தகு பொழுதுபோக்கு அம்சங்கள். அவற்றின் மூலம் இப்போது அவ்விரு ஏரியாவில் இருந்தும் வருகின்ற உன்னதப் படைப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் இங்கே கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட மொழி சினிமா தன் எல்லையைக் கடந்து, அந்த மொழி பேசாத மக்களையும் சென்று சேர்வதற்கு அடித்தளமாக இருப்பது பொழுதுபோக்கு என்ற அம்சம்தான். காட்சி அமைப்புகளால் ஏதோ சில பல வகையில் பிரம்மிப்பைத் தரும் பொழுதுபோக்குப் படங்கள்தான் ஒரு சாதாரண பார்வையாளனைக் கட்டிப்போடுகின்றன. அப்படி பொழுதுபோக்குக்காக வேற்று மொழி சினிமாவை கவனிக்கத் தொடங்கும் பார்வையாளன், அந்த மொழியில் கிடைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உன்னதப் படைப்பையும் ரசிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவான்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், எல்லா ரீதியிலும் முதன்மையாகத் திகழ்வது பாலிவுட்தான். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதில், தெலுங்குக்கு கடும் சவாலாக தமிழ் சினிமா திகழ்கிறது என்றால், அதற்கு ஷங்கர், முருகதாஸ் போன்ற இயக்குநர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

சாதாரண ரசிகர்கள் 2 முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கி, மொழி தெரியாத சினிமாவை ரசிப்பதற்கு முதல் தேவை 'பியூர் என்டர்டெய்னர்' என்ற அடையாளம்தான்.

ஷங்கர் போன்றவர்களின் படங்களை முதல் நாளில் பார்த்துவிட்டு கழுவியூற்றும் தீவிர சினிமா ஆர்வலர்களில் சிலர், குறைந்த பொருட்செலவில் ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்து வரும் சமகால மலையாள சினிமாவுடன் ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களது ஆதங்கம் சரிதான்.

ஆனால், சாமானிய ரசிகர்களிடம் இந்திய அளவில் தமிழ் சினிமா ஈர்த்துள்ள கவனத்துக்கு இணையாக மலையாள சினிமா பெற்றுள்ளதா என்றால் 'இல்லை' என்பது தெளிவு. காரணம், மலையாளத்தில் ஷங்கர்களும் முருகதாஸ்களும் இல்லை.

ஷங்கர்கள் மீது கூறப்படும் குறைகள் எப்போது தெரியுமா பொருத்தமானதாக இருக்கும்?

தமிழில் பியூர் சினிமா முயற்சிகளே இல்லாத சூழலில், முழுக்க முழுக்க வணிக மசாலாக்களே வலம்வரும் பட்சத்தில், ஷங்கர்கள் தங்கள் பிரம்மாண்டங்களின் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தால் அவர்களைக் குறை சொல்வது சரியே. ஆனால், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை அப்படி இல்லையே.

பாலா, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றி மாறன், ரஞ்சித், ராம், தியாகராஜன் குமரராஜா, வசந்தபாலன், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் என பியூர் சினிமா ரசிகர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வரும் படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது. இவர்களைப் போன்றவர்களின் முயற்சியின் பலனாக நல்ல படைப்புகளுக்கு வணிக ரீதியிலான வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கும்பட்சத்தில், தமிழில் உன்னத படைப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் கூடுவது நிச்சயம்.

அதேவேளையில், தமிழ் சினிமாவுக்கான சந்தையை இன்னும் விரிவாக்கும் மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கக் கூடிய ஃபிலிம் மேக்கர்களும் படங்களும் அவசியமாகிறது. அதற்காகத்தான், தமிழ் சினிமாவுக்கு ஷங்கர்கள் தேவை.

ஐயய்யோ... ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் இங்கே அடிக்கோடிட்டு காட்டியிருப்பது, 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்', 'எந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய ஷங்கரை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x