Published : 28 Jan 2015 12:52 PM
Last Updated : 28 Jan 2015 12:52 PM
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது விளையாட்டு திறனை பாராட்டிப் பேசியதற்காக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
அதேவேளையில், தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய குத்துச்சண்டை விளையாட்டான 'தாய் பாக்ஸிங்' விளம்பர தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தன்னை புகழ்ந்து பேசியதும், தாய்லாந்து அரசு தன்னை கவுரவப்படுத்தியுள்ளதும் பெருமகிழ்ச்சியளிப்பதாக மேரி கோம் கூறியுள்ளார்.
மேரி கோம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தாய் பாக்ஸிங் விளையாட்டுக்கு என்னை தூதராக அந்நாடு நியமித்துள்ளதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன். இந்த குத்துச்சண்டை முறையை இந்தியாவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் இத்தகைய விளையாட்டை தற்காப்புக்காக கற்றுக் கொள்வது நல்லது. அமெரிக்க அதிபர் ஒபாமா எனது திறமைகளை அங்கீகரித்துப் பேசியுள்ளதில் பெருமிதம் கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியும்கூட" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT