Published : 02 Jan 2015 06:08 PM
Last Updated : 02 Jan 2015 06:08 PM

குஜராத் கடல் எல்லைப் பகுதியில் குண்டுகளுடன் வந்த கப்பல் வெடித்து சிதறியது: பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக மர்ம கப்பல் அத்துமீறி நுழைய முற்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட அந்த கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்து விரட்டியபோது நடுக்கடலில் வெடித்துச் சிதறியது.

கடந்த 2008 மும்பை தாக்குதல் போன்று கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருக்கக்கூடும் என்றும் அந்த சதி வெற்றிகரமாக முறிய டிக்கப்பட்டுள்ளது என்றும் கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உளவுத் துறை எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம், குடியரசு தின விழாவில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளன. அண்மையில் பெங்களூருவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக கப்பல் ஊடுருவக்கூடும் என்று மத்திய உளவுத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குஜராத்தின் போர் பந்தர் பகுதி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் அன்றிரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலோர காவல் படையின் கண் காணிப்பு விமானமும் அந்தப் பகுதி யில் வட்டமடித்து நோட்டமிட்டது.

சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டையில் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் சுமார் 365 கி.மீ. தொலைவில் சிறிய ரக மர்ம கப்பல் இந்திய எல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் அந்தப் பகுதியில் அரண் அமைத்து இடைமறித்தன.

பாகிஸ்தான் மர்ம கப்பலில் சுமார் 4 பேர் இருந்தனர். அவர்கள் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்களை பார்த்ததும் மீண்டும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி கப்பலை திருப்பி தப்பிக்க முயன்றனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடலோர காவல் படையினர், மர்ம கப்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். ‘கப்பலை நகர்த்தக்கூடாது. நாங்கள் கப்பலை சோதனை யிடப்போகிறோம்’ என கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மர்ம கப்பலின் வேகம் அதிகரித்தது. இந்திய கடலோர காவல் படையினரும் கப்பலை விடாமல் துரத்தினர். சுமார் ஒரு மணி நேரம் மர்ம கப்பல் கடலில் போக்கு காட்டி தப்பிக்க முயன்றது. ஆனால் கடலோர காவல் படை கப்பல்கள் நெருங்கியதால் நடுக்கடலில் அந்த மர்ம கப்பல் வெடித்துச் சிதறியது.

பாகிஸ்தானில் இருந்து வந்த மர்ம கப்பல் முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டி ருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. அதனால் கப்பல் முழுவதும் தீக்கிரையாகி சாம்ப லாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த கப்பலில் இருந்த மர்ம நபர்களை கடலோர காவல் படையினர் நள்ளிரவு முழுவதும் கடலில் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மர்ம கப்பலில் வந்த நபர்கள் தற்கொலைப் படை தீவிரவாதி களாக இருக்கலாம். அவர்களும் கப்பலோடு சேர்ந்து வெடித்துச் சிதறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை.

மும்பை தாக்குதல் பாணியில்..

கடந்த 2008 நவம்பர் 26-ம்தேதி கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கராச்சியில் இருந்துதான் மீன்பிடி ரக கப்பலில் மும்பை வந்தனர். அவர்களின் கொலைவெறித் தாக்குதலில் 166 பேர் பலியாயினர்.

தற்போது அதே பாணியில் புத்தாண்டு கொண்டாட்டம் அல்லது குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கக்கூடும், அந்த சதி வெற்றிகரமாக முறியடிக் கப்பட்டுள்ளது என்று கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒபாமா வருகையின்போது தற்கொலைப் படை தாக்குதல்?

வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர காவல் படை வட்டாரங்கள் கூறியபோது, மர்ம படகில் வந்த நபர்கள் நிச்சயமாக தீவிரவாதிகள்தான். குடியரசுதின நிகழ்ச்சிகளை சீர்குலைக்கவே வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் டெல்லியில் நேற்று கூறியதாவது:

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய அந்த நாட்டு ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதற்காகவே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x