

ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியில் வீரர்கள்
ஜம்மு: குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், ஜம்மு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாதுபாப்பு படைகளின் தீவிர நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகள், கிஷ்த்வார் மற்றும் தோடாவில் உள்ள உயரமான மலைப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளனர். குளிர்கால உறைபனியின் காரணமாக அங்கு பொதுமக்கள் இருப்பு குறைவாக உள்ளது.
உறைபனியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் உள் நுழைவதை தடுக்க, மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் தொலைதூர பள்ளத்தாக்குகளில் ராணுவ ரோந்துப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதக் குழுக்களை மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராதவாறு தடுத்து நிறுத்துவது. அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் விநியோக வழிகளை சீர்குலைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎஃப், சிறப்பு நடவடிக்கைக் குழு, வனக் காவலர்கள் மற்றும் கிராமப் பாதுகாப்புக் காவலர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உறைபனி சூழலில் தீவிரவாதிகளின் இயக்கத்தை கண்காணிக்க ட்ரோன்கள், வெப்ப இமேஜர்கள் மற்றும் தரை உணரிகள் மூலம் சிறப்பு பயிற்சி பெற்ற குளிர்கால போர் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.