

அமராவதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேபுரி பெஞ்சமின் (75). இவர் நர்ஸாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், தாங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பான் கார்டை தவறாகப் பயன்படுத்தி டெல்லியில் போலியாக வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், ஹவாலா பணம் ரூ.48 லட்சம் அவருடைய வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பெஞ்சமின் மீது குற்றம் சாட்டினர்.
மேலும், வீடியோ அழைப்பை துண்டிக்க கூடாது. எங்கும் வெளியில் செல்ல கூடாது. யாருடனும் பேசக் கூடாது என்று மறுமுறையில் இருந்து அந்த போலி அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். வழக்கு மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பணம் செலவாகும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பிரச்சினையில் இருந்து தப்பிக்க அவர்கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட ரூ.48 லட்சத்தை பெஞ்சமின் அனுப்பி வைத்தார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார்,பல்வேறு மாநிலங்களில் இதுபோல் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.