Published : 26 Jan 2015 10:42 AM
Last Updated : 26 Jan 2015 10:42 AM
மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ஒபாமாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராஜ்காட்டுக்கு சென்ற அவர் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் ரோஜா மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தலைவணங்கி, கைகளை கட்டிக்கொண்டு சிறிது நேரம் மவுனமாக இருந்தார். அந்த வளாகத்தில் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார். இதையடுத்து காந்தியின் புகழ்பெற்ற ராட்டையைப் போன்ற சக்கரத்தை காந்தி நினைவக அதிகாரிகள் ஒபாமாவுக்கு வழங்கினர்.
நினைவகத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் குறிப்பு ஒன்றை ஒபாமா எழுதி உள்ளார். அதில், “டாக்டர் மார்டின் லூதர் கிங் கூறியது இன்று உண்மையாகிவிட்டது. மகாத்மா காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிரோட்டமுடன் உள்ளது.
இந்த உலகின் அரிய பரிசு காந்தி. அமைதி, அன்பு ஆகிய அவரது கொள்கைகளை இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமா, கடந்த 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றபோதும் காந்தியை நினைவுகூர்ந்தார். ஒரு முறை தங்களைக் கவர்ந்த மனிதர் (உயிருடன் அல்லது மறைந்த) யார் என்ற கேள்விக்கு, “காந்தி” என பதில் அளித்துள்ளார்.
2010-ம் ஆண்டு இந்தியா வந்தபோதும், காந்தி சமாதியில் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT