Last Updated : 21 Jan, 2015 10:04 AM

 

Published : 21 Jan 2015 10:04 AM
Last Updated : 21 Jan 2015 10:04 AM

உ.பி.யில் மின் திருட்டில் ஈடுபட்ட கிராமம்: சோதனை செய்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் மோதலால் பரபரப்பு

உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒரு கிராமமே மின்சாரத்தை திருடியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோதனை நடத்த வந்த அதிகாரி களை பொதுமக்கள் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தின் எல்லைகளில் உள்ளது சர்ரா எனும் கிராமம். இங்கு 600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்திற்கு வெளியே, உ.பி. மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் தக்ஷிணாஞ்சல் வித்யூத் வித்ரன் நிகாம் லிமிடெட் எனும் மின்சார நிறுவனம் சார்பில் 25 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து நேரடியாக அதிக வோல்ட் திறன் கொண்ட மின்சார வயர் மூலம் சர்ரா கிராமத்தில் இருக்கும் வயல் வெளிகளில் அமைந்துள்ள மோட்டார்களுக்கு மின்சாரம் திருடப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த மின்சாரம் அந்த கிராமத்தின் வீடுகளுக்கும் அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதிகாரிகளை தடுத்த மக்கள்

மாநிலம் முழுவதும் நடந்து வரும் மின்சாரத் திருட்டை தடுக்க சிறப்புக்குழுக்களை உ.பி அரசு அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவினர் சர்ரா கிராமத்தில் அண்மையில் சோதனை நடத்தச்சென்றனர். அப்போது அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர். தகவலறிந்ததும் போலீஸார் வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மோதல் தொடர்பாக கிராமவாசிகள் 24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின் திருட்டால் பல கோடி நஷ்டம்

உ.பி. முழுவதும் நடைபெறும் மின் திருட்டு காரணமாக அம் மாநில அரசிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் மீதும் மின்சாரம் திருடியதாகவும் வழக்குகள் பதிவாவாகி இருந்தாலும் அதை தடுப்பதில் அரசு அதிகாரிகள் திணறி வருவதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x