Published : 20 Apr 2014 01:22 PM
Last Updated : 20 Apr 2014 01:22 PM

லஷ்கர் ஆதரவாளர் வீட்டை தீ வைத்து எரித்த காஷ்மீர் மக்கள்: 20 ஆண்டுகளில் நடந்திராத சம்பவம்

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டை காஷ்மீர் கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோப்பூர் மாவட்டம், நவுபோரா கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான் அகமது ஜாப்ரூ. அவர் அப் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிர அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் இம்ரான் கடத்த முயன்றுள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரைக் காப்பாற்றினர்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் இம்ரானின் வீட்டை தீ வைத்து எரித்தனர். அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீஸார் நவுபோரா கிராமத்துக்கு விரைந்துச் சென்று இம்ரானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அப்துல் குவாயூம் நிருபர்களிடம் கூறியதாவது: லஷ்கர்-இ-தொய்பா ஆதரவாளர் கைது செய்யப்பட்டிருப்பதால் சோப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த ஆண்டில் இரண்டு முறை இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். மீண்டும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

குலாம் மொகிதீன் என்பவரின் வீட்டுக்குள் இம்ரானும் அவரது கூட்டாளிகளும் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். அவர்களில் இம்ரானை போலீஸார் கைது செய்துள்ளனர். முதாசீர் அகமது என்பவரை பொதுமக்கள் பிடித்தனர். எனினும் 2 பேர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் முழுவதும் லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பலர் திரைமறைவு முகவர்களாக செயல்படுகின்றனர். அவர்களை அடையாளம் காண்பதில் போலீஸார் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் மீது பொதுமக்களே தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x