Last Updated : 20 Jan, 2015 09:55 PM

 

Published : 20 Jan 2015 09:55 PM
Last Updated : 20 Jan 2015 09:55 PM

மரபணு விவர குறிப்பெடுப்புக்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

எவரும் கோராத இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ’டி.என்.ஏ’ எனப்படும் மரபணு விவரகுறிப்பெடுப்புக்கான மசோதா வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து லோக்நிதி என்ற தன்னார்வக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலமனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் நீரஜ் கிஷண் கௌல் ஆஜராகி, மத்திய பயோ டெக்னாலஜி துறை சார்பில் ஒரு அறிஞர் குழு அமர்த்தப்பட்டு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ததாகவும் அதில் உருவாக்கப்பட்ட ‘மனிதகுல மரபணு விவரக் குறிப்பெடுப்பு மசோதா’ அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.

மரபு சோதனையாளரின் தேவை 400 இருப்பது 40

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் கண்டெடுக்கப்படும் 40,000 -க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத உடல்களின் குற்ற புலன் விசாரணைக்காக பல நபர்களின் மரபணு விவரக்குறிப்புகள் வங்கி அமைக்க இந்த மசோதா வகை செய்ய உள்ளது. ஆண்டுதோறும் ரூ.80 கோடி செலவாகும் இதற்கு 400 மரபணு சோதனையாளர்கள் தேவைப்படுவதாகவும் மத்திய அரசிற்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் சுமார் 40 மரபணு சோதனையாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், அந்த சோதனைக்கான கால அவகாசம் மிகவும் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக தமது மனுவில் லோக்நிதி கூறியிருந்தது.

2011-ல் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்

தேசிய குற்றப்பதிவு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளி விவரத்தின்படி அடையாளம் தெரியாத உடல்கள் கடந்த 2007-ல் 37,282, 2008-ல் 37,668, 2009-ல் 43,902, 2010-ல் 33,857 மற்றும் 2011 ஆம் ஆண்டில் 37,193 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 2011 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு 4,479 உடல்களும், முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் 6,313, மூன்றாவதாக உபியில் 4,084, கர்நாடகாவில் 2,440 மற்றும் ஆந்திராவில் 2,639 உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருடந்தோறும் காணாமல் போய் விடுபவர்கள் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 2008, 2007 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு முறையே 13,268, 13,586 மற்றும் 11,846 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x