Published : 16 Apr 2014 09:52 AM
Last Updated : 16 Apr 2014 09:52 AM

வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தேர்தலுக்குப் பின் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தேர்தலுக்குப் பின் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசி எண்டர்பிரைசஸ் நிர்வாகி களாக இருந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கடந்த 91-ம் ஆண்டு முதல் 94-ம் ஆண்டு வரை, 3 ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஜனவரி 30-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 4 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சசி எண்டர்பிரைசஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இந்த வழக்கில் மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, “ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, “அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராக மறுப்பதால் வழக்கு விசாரணை பாதிக்கிறது. பிப்ரவரி 6, 13, 26 தேதிகள், மார்ச்சில் 13, 20, ஏப்ரல் 3, 10, என தொடர்ந்து எந்த வாய்தாவிலும் ஆஜராகவில்லை. இனிமேலும் அவர்களுக்கு அவகாசம் அளிக்க கூடாது” என்று வாதிட்டார்.

தேர்தல் நேரம் என்பதால் இப்போது ஆஜராக உத்தரவிட முடியாது என்று மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x