Published : 17 Jan 2015 11:18 AM
Last Updated : 17 Jan 2015 11:18 AM

தருண் தேஜ்பாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 3 வார தடை

பாலியல் புகாரில் சிக்கிய தெஹல்கா நிறுவனர், ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை அவருக்கு வழங்கவும் போலீஸா ருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் கோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக தருண் தேஜ்பால் மீது கோவா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோவா குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணையை எதிர்த்து தருண் தேஜ்பால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், `என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்று தெரிந்தால்தான், அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் வாதிட முடியும். குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்வதற்கு முன்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் எனக்கு வழங்க வேண்டும். ஆனால் ஆவணங்கள் வழங்கும் முன்பாக விசாரணையை தொடங்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முறையற்றது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தருண் தேஜ்பால் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, `குற்றம் சாட்டப்பட்டவர் நியாயமான விசாரணை கோர முழு உரிமை உண்டு.

ஆவணங்களை கோருவது அவரது உரிமை. அதை தராத அரசு தரப்பை கண்டிக்காமல் வழக்கை தொடர உத்தரவிடுவது கோவா குற்றவியல் நீதிமன்றத்தின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவா நீதிமன்ற விசாரணைக்கு மூன்று வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தருண் தேஜ்பாலுக்கு வழங்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

ஆவணங்களைப் பெற்றதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதங்களை தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தருண் தேஜ்பாலுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x