Published : 22 Jan 2015 03:26 PM
Last Updated : 22 Jan 2015 03:26 PM
தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அம்மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் மத்திய மருத்துவ நிபுணர்க் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பன்றிக் காய்ச்சல் நோயை முழுவதுமாக கட்டுப்படுத்த மத்திய மருத்துவ நிபுணர்க் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து மத்திய மருத்துவ நிபுணர்க் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய குழு உறுப்பினர்கள் சசி கவுர், அசோக் குமார், ரவி ஆகியோர் நோய் பாதிக்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். மருத்துவமனையின் டீன் உள்ளிட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
மருத்துவமனையின் சுகாதாரம் மோசமாக இருப்பதாக மத்திய மருத்துவ நிபுணர்க் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நோய் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெற விரும்புவர்களை அனுமதிப்பதில் குளறுபடிகள், கெடுபிடிகள் இருப்பதாக நிபுணர்க் குழுவினர் கடிந்து கொண்டதாக தெரிகிறது.
தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 554 பேருக்கு இந்த நோயின் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 173 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் மட்டும் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோயின் அறிகுறியால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT