Published : 19 Jan 2015 02:30 PM
Last Updated : 19 Jan 2015 02:30 PM

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 21-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தியது.

பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி நடத்தப்படவிருந்த ஒருநாள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது மத்திய அரசு தொடர்ந்து கெடுபிடி காட்டிவருவதால் வரும் ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்தது.

இதனால், ஜனவரி 21 முதல் 24 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால் 6 நாட்கள் தொடர்ந்து வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்திய வங்கிகள் அளித்த உறுதிமொழிகள் ஏற்கப்பட்டதால், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் திங்கள்கிழமை இரவு அறிவித்தது.

அதேவேளையில், "பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சுமுகத் தீர்வு ஏற்படாவிட்டால் பிப்ரவரி 15-க்கு பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவோம்" என்று வங்கி ஊழியர்கள் தரப்பு எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x