Last Updated : 20 Jan, 2015 10:34 AM

 

Published : 20 Jan 2015 10:34 AM
Last Updated : 20 Jan 2015 10:34 AM

ஓரிடத்தில் பேசிய ராம்தேவை பல இடத்தில் விசாரிக்க முடியாது: அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராகுல்காந்திக்கு எதிராக யோகா குரு ராம்தேவ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவரை பல இடங்களில் விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் தேவ், தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் காந்தி செல்வது, `தேனிலவுப் பயணம்’ என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இது தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் ராம்தேவுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய ராம்தேவ், “லக்னோவில் பதிவு செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குடன் மற்ற வழக்குகளை இணைத்தோ அல்லது உச்ச நீதிமன்றம் குறிப்பிடும் ஓரிடத்திலோ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் ராம்தேவுக்கு எதிரான வழக்கு களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 9-ம் தேதி தடைவிதித்து.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ராம்தேவ் தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில் இதற்காக அவரை 20 இடங்களில் விசாரிக்க முடியாது” என்றனர்.

அப்போது எதிர்தரப்பு வழக் கறிஞர், “ராம் தேவின் கருத்தால் அவமதிக்கப்பட்டவர்களுக்கு வழக்குகள் தொடர சட்ட உரிமை உள்ளது” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “உங்கள் மன வேதனையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் உங்களுக்கு உரிமை உள்ளது போல் அவருக்கும் உரிமை உள்ளது” என்றனர்.

இதையடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் தனித்தனியே மனு தாக்கல் செய்து அவதூறு வழக்கை ஓரிடத்தில் மாற்றிக்கொள்ளுமாறு ராம்தேவின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x