Published : 01 Jan 2015 08:32 AM
Last Updated : 01 Jan 2015 08:32 AM
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உ.பி. அமைச்சருமான ஆசம் கான், கான்பூரில் நேற்று கூறியதாவது:
நாதுராம் கோட்சேவுக்கு ஒரே ஒரு இடத்தில் கோயில் கட்டினால் மட்டும் போதாது. மாறாக நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு கோயில் கட்ட வேண்டும். அப்படிச் செய்தாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.
ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் மசூதியை இடித்துவிட்டு கோட்சேவுக்கு கோயில் கட்டக்கூடாது. தாஜ் மகால் உள்ள இடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை வைத்தாலும் அதற்கும் அனுமதி அளிக்கலாம்.
இதற்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதுகூட வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதே மாநிலம் மீரட் நகரில் கோட்சேவுக்கு கோயில் கட்டுவதற்காக சில தினங்களுக்கு முன்பு அகில பாரத ஹிந்து மகாசபா சார்பில் பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில்தான் ஆசம் கான் மேற்கண்டவாறு கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது போலவே, தாஜ்மகாலையும் இடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஆசம் கான் ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டாய மதமாற்றம் குறித்து கான் கூறும்போது, “முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஷாநவாஸ் ஹுசைன் உள்ளிட்ட தங்கள் கட்சியினரை முதலில் மதமாற்றம் செய்துவிட்டு மற்றவர்களை மதமாற்றம் செய்ய பாஜக முயல வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT