Last Updated : 12 Jan, 2015 04:48 PM

 

Published : 12 Jan 2015 04:48 PM
Last Updated : 12 Jan 2015 04:48 PM

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குரிமை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு மின்னஞ்சல் வாக்கு அல்லது பதிலி வாக்கு முறையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அவர்கள் தொடர்ந்த மனுவில், ‘வேலைவாய்ப்பு, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போது, அவர்கள் நேரில் வந்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் 1.1 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளில் வசிப்போருக்கு 114 நாடுகளில் அங்கிருந்தே ஓட்டளிக்கும் உரிமையை வழங்கியுள்ளன. 20 ஆசிய நாடுகளில் இந்த வசதி உள்ளது. இந்த வசதியை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

12 பேர் குழு அறிக்கை

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் துணை ஆணையர் வினோத் ஜட்ஷி தலைமையில், மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் 12 பேர் அடங்கிய குழு இதுகுறித்து ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.

இந்த அறிக்கையில், ‘ராணுவ வீரர்களுக்கு இருப்பதைப் போல் ‘பதிலி வாக்கு’ முறை அல்லது மின்னஞ்சல் மூலம் வாக்கு (இ- போஸ்டல் பேலட்) பதிவு செய்யும் முறையை அமல்படுத்தலாம். இதில் குறைந்த அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வசதியை அளிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எல்.நரசிம்மா, தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து, எட்டு வாரங்களுக்குள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மின்னஞ்சல் வாக்கு எப்படி?

தகுதியுள்ள வேட்பாளர்கள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்களுக்கு காலி வாக்குச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அதை நிரப்பி, தபால் மூலம், அவர்களது பாஸ்போர்ட் முகவரி உள்ள தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த வாக்கு உரிய அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். இந்த வாக்கு ‘வெளிநாடு வாழ் வாக்காளர்’ என்ற தனி பட்டியலின் கீழ் கணக்கில் கொள்ளப்படும்.

ராணுவ வீரர்களுக்கு ‘பதிலி வாக்கு’ முறை அமலில் உள்ளது. அதன்படி, அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிக்கலாம். அதே நடைமுறை தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x