Last Updated : 16 Apr, 2014 12:46 PM

 

Published : 16 Apr 2014 12:46 PM
Last Updated : 16 Apr 2014 12:46 PM

கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சீனிவாசன், 12 வீரர்களுக்கு தொடர்பு: பிசிசிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

“கிரிக்கெட் சூதாட்டப் புகார் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசன் மற்றும் 12 வீரர்களின் பெயர்கள் உள்ளன. நடப்பதை தெரிந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனை பதவி நீக்கம் செய்து, சுனில் கவாஸ்கரை அப்பதவியில் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராகிம் கலிஃபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சூதாட்டப் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி அளித்துள்ள அறிக்கையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் மற்றும் 12 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறும்போது, “புகார் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் விரும்பவில்லை. அப்படி விசாரணை நடந்தால், அது வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் புகழைக் கெடுத்து விடும். ஆனால், நடப்பதை தெரிந்து கொண்டு, நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவது குறித்து பிசிசிஐ பதிலளிக்க வேண்டும்” என்றனர்.

ஐபிஎல் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கி விட்டதால், அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தரராமன் அதே பதவியில் தொடரவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். வாரியத்தின் புதிய தலைவர் கவாஸ்கரின் பரிந்துரைப்படி இந்த முடிவை அறிவிப்பதாக கூறிய நீதிபதிகள், “சுந்தரராமன் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு, ரகசியம் காத்து பணிபுரிய வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மற்றும் சீனிவாசன் இருவரும் முத்கல் கமிட்டியில் அளித்துள்ள வாக்கு மூல ஒலிப் பதிவுகளை கேட்க அனுமதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அவரது பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது குறித்து வழக்கு விசாரணைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை 22-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x