Last Updated : 13 Jan, 2015 03:24 PM

 

Published : 13 Jan 2015 03:24 PM
Last Updated : 13 Jan 2015 03:24 PM

ஜல்லிக்கட்டுக்கு பச்சைக்கொடி: மத்திய அரசு விரைவில் அரசாணை வெளியிட வாய்ப்பு

பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்ட காளை மாடுகள் நீக்கப்பட உள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அரசாணை எந்நேரமும் வெளியிடப்படாலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த வருடம் பொங்கலில் வழக்கம்போல் ஜல்லிகட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையின் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் இன்று மதியம் டெல்லியின் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து அளித்தார்.

இதில், அவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி தமிழகத்தின் செய்தியாளர்கள் முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தனர். இதற்கு சிரித்தபடியே நேரடியாக பதில் அளிக்காமல் ஜவடேகர் , ‘இது குறித்து விரைவில் ஒரு அரசு அறிவிக்கை வெளியாக உள்ளது’ என்று மட்டும் கூறிச் சென்று விட்டார்.

இது குறித்து ’தி இந்து’விடம் அதே விருந்தில் கலந்து கொண்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை நீக்கி உத்தரவிடும்படி பிரதமர் நரேந்தர மோடி அறிவுறுத்தி உள்ளார். இதற்காக, நம் அமைச்சர் ஜவடேகரையும் நேரில் அழைத்து பேசினார். அதை தொடர்ந்து அதற்கான அரசு அறிவிக்கை வெளியிடும் பணி அதிரடியாக நடந்து வருவதால் அது, எந்நேரமும் வெளியாகும்.’ எனக் கூறுகின்றனர்.

மக்களவை தேர்தலுக்கு பின் மத்திய அரசு தீவிரமாக தமிழக அரசியலின் மீது காட்டும் ஆர்வம், ஜல்லிகட்டு மீண்டும் நடத்த சாதகமாக அமைந்து விட்டதாகவும், கடந்த ஆட்சியில் காளைகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டதை மக்கள் முன் வெளிக்காட்டும் வகையிலும் இந்த செயல் அமைந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.

முன்னதாக, ஜல்லிகட்டு மீண்டும் நடத்தப்படும் என அறிவிப்பளித்த தமிழக அரசு அதன் மீதான தடையை நீக்கும் பொருட்டு தனது அரசு அதிகாரிகளை நேற்று டெல்லிக்கு அனுப்பி இருந்தது. இவர்கள், மத்திய அரசு அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியானது. ஜல்லிகட்டு மீதான தடை கடந்த மே 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினால் ஏற்பட்டது.

மத்திய அரசு 2011-ல் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்து அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்து ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் கடந்த 07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமும் செல்லாது என்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உருவானது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை கோருவது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவ்வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டை நடத்த உரிய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்ட காளை மாடுகள் நீக்கப்படுவதற்கான அரசானை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x