

உத்தரப் பிரதேசம் பதான் மாவட்டத்தில் காவலர்கள் இருவரால் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு, காவல் நிலையத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று, பதான் மாவட்டம் முஸாஜங் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து 14 வயது சிறுமியை இரண்டு காவலர்கள் கடத்தியுள்ளனர்.
பின்னர் காவல் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை கொண்டு வந்த காவலர்கள் இருவரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். இதனையடுத்து காவலர்கள் வீர் பால் யாதவ், அவ்னிஷ் யாதவ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து காவல் கண்காணிப்பாளர் லல்லான் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருக்கும் இரண்டு காவலர்களையும் பிடிக்க போலீஸார் முயற்சித்து வருவதாகவும் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.