Published : 12 Jan 2015 05:10 PM
Last Updated : 12 Jan 2015 05:10 PM

பிப்ரவரி 7-ல் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல்: 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நடைபெறுகிறது- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார்.

கடந்த 2013 டிசம்பரில் நடை பெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் லோக்பால் விவகாரத்தால் 49 நாள்களில் கேஜ்ரிவால் பதவி விலகினார்.

இதை தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி 15-ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறைவடைகிறது.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14-ம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜன. 21-ம் தேதி். மனுக்களை வாபஸ் பெற ஜன. 24-ம் தேதி கடைசி நாளாகும்.

70 தொகுதிகளுக்கும் பிப்.7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். பிப். 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும். டெல்லியின் வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 251 பேர். வாக்களிக்க வசதியாக 11,763 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x