Published : 14 Jan 2015 01:45 PM
Last Updated : 14 Jan 2015 01:45 PM
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோர் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த லாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதை கேரள அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது, அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று அந்த மாநில அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த டிசம்பர் தொடக்கத்தில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அந்த மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்துவதற்கு அனுமதி அளிக் கக்கூடாது. அங்கு புதிதாக அணை கட்ட தமிழக அரசிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் கேரள மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று நரேந்திர மோடியிடம் இருவரும் கூறினர்.
இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT