பெங்களூரூவில் போலி பணி அனுபவ சான்றிதழ்களை வழங்கி வந்த மோசடி ஐ.டி. கும்பல் கைது

பெங்களூரூவில் போலி பணி அனுபவ சான்றிதழ்களை வழங்கி வந்த மோசடி ஐ.டி. கும்பல் கைது
Updated on
1 min read

ஐ.டி.நிறுவனங்களை நடத்துவதாக காண்பித்துக் கொண்டு போலி பணி-அனுபவ சான்றிதழ்களை ஒரு கணிசமான தொகைக்கு அளித்து வந்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இது பற்றிய தகவல் கிடைத்தவுடன், மரதஹல்லியில் உள்ள இரண்டு போலி ஐ.டி.நிறுவனங்களை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அப்போது ரூ.30,000 பெற்றுக் கொண்டு பணி-அனுபவம் பெற்றுள்ளதாக பலருக்கும் போலி சான்றிதழ் வழங்கி வந்த மோசடி தெரியவந்தது.

எந்த வேலைக்குப் போனாலும் 'அனுபவம் என்ன?' 'எத்தனையாண்டு காலம் அனுபவம்' என்று நிறுவனங்கள் கேட்பதையடுத்து வேலை கிடைக்காதவர்கள் இத்தகைய போலி நிறுவனங்களை அணுகி போலி சான்றிதழ்களை பணம் கொடுத்துப் பெறுவது நடந்து வருகிறது.

இந்த மோசடி குறித்த தகவல் கிடைத்தவுடன் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நெக்சிஸ் டெக்னாலஜீஸ், வி.ஜி.எஸ். டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 6 போலி ஐ.டி. நிறுவனங்களை ஒரு கும்பல் நடத்தி வந்தது தெரியவந்தது.

வேலை தேடுபவர்களுக்கு அனுபவ சான்றிதழ் வழங்குவதே இந்த நிறுவனங்களின் ஒரே வேலை, என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் கிருஷ்ணா (26), விஜய் ராக ரெட்டி (35), சாய் விஜய் (35), வெங்கட ரெட்டி (26) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப தயாராக இருந்த 1,000 போலி சான்றிதழ்களுடன் கணினிகள், லேப்டாப்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த் கும்பல் பல மாதங்களாக இந்த மோசடியைச் செய்து வந்ததாக காவல்துறை துணை ஆணையர் அபிஷே கோயல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in