Published : 19 Dec 2014 11:41 AM
Last Updated : 19 Dec 2014 11:41 AM
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை மேலும் 15 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ட்விட்டர் சமூகவலைதளத்தில் 'ஷமிவிட்னஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட கணக்கின் பதிவு கள் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப் புக்கு ஆதரவாக செயல்பட்டதாக மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். நேற்றுடன் 5 நாட்கள் காவல் முடிவடைந்ததால் தனிப்படை போலீஸார் அவரை பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போலீஸார் தரப்பில், மேக்தியை மேலும் 25 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சோமராஜூ 15 நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து, மேக்தி ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பெங்களூரு தனிப்படை போலீஸார் மட்டுமின்றி, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மேக்தியிடம் விசாரணை நடத்துவர் எனக் கூறப்படுகிறது.
விசாரணை குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, ,''மேக்தியின் ட்விட்டர் கணக்கில் ஆங்கிலத்திலும், அரபியிலும் செய்யப்பட்டுள்ள 1 லட்சத்து 29 ஆயிரம் பதிவுகளை மொழி பெயர்க்கும் பணி நடக்கிறது.
அவரின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் 17,700 பேரில் 80 சதவீதம் பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது. அவர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை அறிய அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது” என்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை ஆஜர் படுத்துவதற்கு முன்பாக மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ள அவரது தந்தை மேகெயில் பிஸ்வாஸூம்,தாய் மும்தாஜ் பேகமும் சந்தித்து பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT