Published : 01 Apr 2014 09:10 AM
Last Updated : 01 Apr 2014 09:10 AM

தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் எஸ்.எம்.எஸ் தகவல்: நாட்டிலேயே முதன்முறை

பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்ட் அமைப் பினர் முதன்முறையாக பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "செல்போன் வாடிக்கையாளர்கள் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றனர். அதில், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், தேசியவாதிகள் மற்றும் புரட்சிகர மக்கள் ஆகியோர் வரும் பொதுத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) எல்லை மண்டலக் குழு செய்தித் தொடர்பாளர் அவினாஷ் சார்பில் இந்த எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு தங்களது அமைப்பின் தொண்டர்கள், மக்கள் விடுதலை கொரில்லா படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு மாவோயிஸ்டுகள் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர்.

இதுதவிர, ஜமுய், லகிசரை, பங்கா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய மாவட்டங்களில் தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி போஸ்டர்களையும் ஒட்டி உள்ளனர். இதனை போலீஸார் அகற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x