

ராஞ்சி: ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தின் 27 குழந்தைகள் நேபாளத்துக்கு கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவர்களை மதம் மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பித்து வீடு திரும்பிய 2 குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததை விவரித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் ரேணு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் கடத்தல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அவ்விரு குழந்தைகளின் கிராமத்துக்கு போலீஸ் குழு சென்றது. அந்த கிராமத்தில் மட்டும் 11 குழந்தைகள் நேபாளத்துக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது.
இவர்களில் 4 பேர் வீடு திரும்பினர், 5 பேர் இன்னும் நேபாளத்தில் உள்ளனர். அவர்களை திரும்ப அழைத்துவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 16 குழந்தைகள் நேபாளத்துக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.