Last Updated : 03 Dec, 2014 03:10 PM

 

Published : 03 Dec 2014 03:10 PM
Last Updated : 03 Dec 2014 03:10 PM

கருப்புப் பணம்: இந்தியா செய்ய வேண்டியது என்ன?- சுவிஸ் தூதர் சிறப்புப் பேட்டி

கருப்புப் பணம் என்றவுடன் சுவிஸ் நோக்கி கை உயர்த்த வேண்டாம் என்றும், இந்தியாவுக்குள்ளேயே கருப்புப் பண பதுக்கல் சம்பவங்கள் பல நடக்கிறது என்றும் சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் கூறியுள்ளார்.

கருப்புப் பண பதுக்கல் குறித்த ஆதாரங்களை இந்தியா கோரியதாக இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் வான் 'தி இந்து'-வுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கருப்புப் பண விவகாரத்தில் சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் பேசியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி இருக்கும் கருப்புப் பண விவரங்களை இந்தியா கோரியுள்ளது. இதில் பல விஷயங்களை ஆராய வேண்டி உள்ள நிலையில், இந்தியாவின் இந்த கோரிக்கை முதற்கட்டமான ஒன்று தான். கருப்புப் பணத்தை பதுக்கிய தனி நபர்கள் மீதான தன்னிச்சையான விசாரணைகள் இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு நாங்கள் எங்களது ஒத்துழைப்பை அளித்து வருகிறோம்.

திருடு போன எச்.எஸ்.பி.சி வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை இந்தியா கோரியுள்ளது. ஆனால் எங்களிடம் அது குறித்து உள்ள கோப்புகள் அனைத்தும் சரியானது தானா என்று எங்களால் உறுதி செய்ய முடியாத நிலையில் அதன் விவரங்களை சுவிஸ் அரசால் வெளியிட முடியாது.

சர்வதேச அளவில் கருப்புப் பணம் குறித்து பேசப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் பல வகைகளில் கருப்புப் பண பதுக்கலும் பரிவர்த்தணைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

வரி விதிப்பு குறித்த தகவல்களை தானியங்கி முறையில் பரிமாற்றம் செய்ய சுவிஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழிமுறை வரும் 2017-ல் உலக அளவில் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அழுத்தம், கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த நெருக்கடியால் மட்டுமே தரப்படுகிறது. வரி விதிப்பு தகவல் பரிமாற்றம் குறித்த வரையரைக்குள் இந்தியா இன்னும் இணையவில்லை.

சுமார் ரூ.14,000 கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் தங்களது வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக எஸ்.என்.பி. வங்கி எங்களுக்கு அளித்த தகவலில் குறிப்பிட்டுள்ளது. கருப்புப் பணம் இந்த இடத்தில் இருக்கிறது என்று தான் குறிப்பிட முடியுமே தவிர, அவற்றின் விவரத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை.

சுவிட்சர்லாந்து அரசு கருப்புப் பண கணக்குகள் குறித்து விவரம் அளிக்காமல் தங்களது வங்கிகளை பாதுகாக்க நினைப்பதாக கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்துபவர்கள் எங்கள் நாட்டின் மீது குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டில் தவறான பார்வை உள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கி துறைகள் கடுமையான நெருக்கடியில் இருப்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இதற்கான புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் எங்களது அரசு உள்ளது. வளர்ச்சி பெருக பெருக அதற்கு இணையான மோசடிகளை கையாள்வது குறித்து புதிய சட்டங்களை அமல்படுத்துவது அவசியமாக உள்ளது.

ஏற்கெனவே சுவிஸ் வங்கிகளுக்கு மிகப் பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் எங்கள் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். அதற்கான இந்தியர்களின் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு எங்களிடம் முறையிடக்கூடாது. அதற்கான சாத்தியம் இல்லை.

ஆனால் உங்களிடம் மோசடி நபர்கள் குறித்த ஆதாரம் இருந்தால், அதன் மூலம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நாங்கள் அதற்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x