Published : 15 Dec 2014 03:09 PM
Last Updated : 15 Dec 2014 03:09 PM
தனது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லதவர்கள் என போலீஸ் விசாரணையில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) ட்விட்டர் இணையதளம் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களவையில் இன்று தானாக முன்வந்து மேக்தி கைது தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், "ட்விட்டரில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லதவர்கள். அவரைப் பின் தொடர்ந்த முஸ்லிம்களில் பெரும்பாலோனார் மேற்கத்திய நாடுகளை குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்தவர்களே என போலீஸ் விசாரணையில் மேக்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.எஸ். ஆதரவு பதிவுகளை பகிர்ந்தபோதும், ட்விட்டர் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை என மேக்தி மறுத்துள்ளார்.
மேக்தி, அரபு மொழியில் இருக்கும் ஐ.எஸ். ஆதரவு இணையதளச் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து @ShamiWitness என்ற ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் அவர் ஐ.எஸ். அமைப்பை பின் தொடர்ந்து வருகிறார்.
கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மேக்தி 2012-ல் பொறியியல் படிப்பை முடித்து அதே ஆண்டு பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
மேக்தி கைதைத் தொடர்ந்து கர்நாடக போலீஸாரிடம் இருந்து அனைத்துத் தகவல்களையும் உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. " என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT