Published : 13 Dec 2014 09:27 AM
Last Updated : 13 Dec 2014 09:27 AM

பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூட எதிர்ப்பு: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி; 18-ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுக்கு ஏற்பாடு

பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடும் விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆலை மூடலுக்கு நோக்கியாவை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 18-ம் தேதி நடை பெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த (சிப்காட்) தொழிற்பூங்காவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இது செல்போனுக்கு தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆலையையும் மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவ தாகவும், வரும் 24-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழி லாளர் நலத்துறை துணை ஆணையர் தர்மசீலன் தலைமை யில் நிர்வாகம் மற்றும் தொழிற் சங்கம் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில், சிஐடியு, எல்பிஎப், ஏடிபி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் போதுமான ஆர்டர் வருவதில்லை. எனவே உற்பத்தி இல்லாததால் தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலையை மூடும் நிலமை ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. ‘பாக்ஸ்கான் தொழிற்சாலை நோக்கியாவை மட்டுமே நம்பி இல்லை. சோனி, மோட்டரோலா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்கள் சப்ளை செய்து வருகிறது. இதனால், நோக்கியா மூடப்பட்டதை காரணம் காட்டி பாக்ஸ்கான தொழிற்சாலையை மூடுவதை ஏற்க முடியாது. தொடர்ந்து தொழிற்சாலையை இயக்க வேண்டும்’ என கூறினர்.

இதனால்,பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதை யடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 18-ம் தேதி நடத்தப்படும் என, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தர்மசீலன் கூறியதாவது: இருதரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தோம். ஆனாலும், சுமுக உடன்பாடு ஏற்படாததால், வரும் 18-ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்’ என்றார்.

தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘பாக்ஸ்கான்’தொழிற்சாலை, நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, கடந்த 3 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைபாடுகளில் பணிபுரிந்து வந்த 6,400 தொழி லாளர்களை பணியில் இருந்து நிறுத்தியுள்ளனர். மேலும், பாக்ஸ்கான் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்துவதற்கு நோக்கியாவை காரணம் காட்டு வதை ஏற்க முடியாது. நோக்கியா உற்பத்தி நிறுத்தம் செய்தபிறகும், கடந்த 5 மாதங்களாக இங்கு உற்பத்தி நடந்துள்ளது. எனவே, தொழிற்சாலையை மூடக்கூடாது என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்த வேண்டும்’ என்றனர்.

நோக்கியா உற்பத்தி நிறுத்தம் செய்தபிறகும், பாக்ஸ்கானில் உற்பத்தி நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x