

இந்தியாவுக்கு வந்தவுடன் உடனடியாக விசா வழங்கும் சலுகை திட்டத்தால், கோவா மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கோவா விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரி அரவிந்த் குமார் எச்.நாயர் கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம் கடந்த 17-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அப்போதிலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 100 விசா வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் மொத்தம் 1,091 விசா வழங்கியுள்ளோம்.
இந்த சலுகை விசாவைப் பெற்று ரஷ்யாவைச் சேர்ந்த 595 பேர், உக்ரைனைச் சேர்ந்த 430 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 25 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 15 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த 7 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 பேர், பிலிப்பைன்ஸை சேர்ந்த 4 பேர், இஸ்ரேல், ஜோர்டானைச் சேர்ந்த தலா 3 பேர் நியூஸிலாந்தைச் சேர்ந்த 2 பேர், பிரேசில், பின்லாந்து, கென்யா, நார்வே, சிங்கப்பூரைச் சேர்ந்த தலா ஒருவர் பயனடைந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க அதிகமான வெளிநாட்டினர் கோவா வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேகர் கூறும்போது, “உடனடி விசா வழங் கும் திட்டம் கொண்டுவரப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை கோவாவுக்கு வருகை தராத பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்” என்றார்.