Published : 09 Dec 2014 09:09 AM
Last Updated : 09 Dec 2014 09:09 AM

தென் மாவட்டங்களில் சாதி மோதல் இல்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

தென் மாவட்டங்களில் சாதி மோதல் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டப் பேரவையில் துணை நிதி நிலை அறிக்கை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில், புதிய தமிழகம் உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, தென் மாவட்டங்களில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றி குறிப்பிட்டார். அவரது பேச்சின் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த விளக்கம்:

கடந்த மூன்று ஆண்டுகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ள வழக்குகளை ஒப்பிடுகையில், இந்த மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய மாறுதல் ஏதுமில்லை. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ரீதியிலான கொலைகள் 2013-ம் ஆண்டில் 5-ம், 2014-ல் இதுவரை 10 கொலைகளும் நடந்துள்ளன.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் சாதி ரீதியில் ஒரு கொலையும், 2014-ல் இதுவரை 3 கொலைகளும் நடந்துள்ளன. திருநெல்வேலி நகரில் சாதி ரீதியாக 2012 ல் ஒரு கொலையும், 2013-ல் 2 கொலைகளும், 2014 ல் இதுவரை 2 கொலைகளும் நடந்துள்ளன. காவல்துறையினர் இம்மாவட்டங்களில் பதிவான கொலை வழக்குகளில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டுள்ளனர்.

அமைதி கூட்டங்களை கூட்டியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும், சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது உட்பட பல நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

எனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளில், இம்மாவட்டங்களில் தனிப்பட்ட சம்பவங்களை தவிர, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் சாதி மோதல்கள் எதுவும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x