

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் இளைய சகோதரரும் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மைத்துனருமான மஜிதியாவுக்கு ஜலந்தரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு அவர் ஆஜரானார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமைச்சர் மஜிதியாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் சிறப்பு இயக்குநர் (வடக்கு) கர்னல் சிங் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்றனர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மஜிதியா கூறும்போது, “அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத் துழைப்பு கொடுப்பேன். இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றார்.
அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டபடி நிதி அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான சில ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் மஜிதியா ஒப்படைத்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டது தொடர் பாக, ஃபதேகர் சாஹிப் நகர காவல் துறையினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாடுவாழ் இந்தியர் அனூப் சிங் கலோன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை யில் பல ஆயிரம் கோடி மதிப்பி லான போதைப் பொருள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் காவல் துறை டிஎஸ்பி ஜெகதிஷ் போலா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அமிர்தசரஸ் தொழிலதிபர்கள் (மருந்து) பிட்டு அவுலாக் மற்றும் ஜெகஜித் சிங் சஹால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
மஜிதியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண் டும் என வலியுறுத்தி காங்கிரஸ், பாஜக மற்றும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.