Published : 10 Dec 2014 04:30 PM
Last Updated : 10 Dec 2014 04:30 PM
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை அடுத்து, புதிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
நிலக்கரித்துறையில் முறைகேடுகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இது நிலக்கரிச் சுரங்கங்களை தனியார்மயமாக்கும் முயற்சி அல்ல என்று நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது.
1973-ஆம் ஆண்டே தேசியமயமாக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களை தனியார்மயமாக்கும் முயற்சியே இது என்று திரிணமூல் குற்றஞ்சாட்டியது.
1973 நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமையாக்கச் சட்டத்தை இந்த புதிய மசோதா ஒன்றுமில்லாமல் செய்துள்ளது. இதனால் நிலக்கரிச் சுரங்கங்களையும், நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதுதான் அனுமதிக்கப்படும் என்று இடதுசாரிகள் கண்டனக்குரல் எழுப்பினர்.
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் 204 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து இந்த மசோதாவுக்கான அவசியம் ஏற்பட்டதக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்கவும், பலர் வேலைவாய்ப்பில்லாமல் போவதை தடுக்கவுமே இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டது என்றார் அவர்.
204 சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து இந்த நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடிக்கணக்கில் வங்கிகள் வழங்கிய கடன்கள் நிலவரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து வங்கிகளை மீட்கவும் இந்த புதிய மசோதாவை உருவாக்க அவசியம் ஏற்பட்டதாக பியுஷ் கோயல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT