Last Updated : 15 Dec, 2014 11:29 AM

 

Published : 15 Dec 2014 11:29 AM
Last Updated : 15 Dec 2014 11:29 AM

டெல்லியில் வேகமாக சென்ற டாக்ஸியை தடுக்க முயன்ற 2 போலீஸார் பரிதாப பலி: மற்றொரு கான்ஸ்டபிள் கவலைக்கிடம்

டெல்லியில் அதிவேகமாக சென்ற டாக்ஸியை (கார்) தடுக்க முயன்ற இரண்டு போலீஸார் அதே டாக்ஸி மோதி பலியாயினர்.

படுகாயமடைந்த மற்றொரு கான்ஸ்டபிள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காலிந்தி குஞ்ச் சோதனைச்சாவடியில், அதன் சைத்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகேந்தர் சர்மாவுடன் காவலர்களான பிரஹலாத் குமார் சிங் மற்றும் கப்தான் சிங் ஆகிய இருவரும் நேற்று அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு டாக்ஸி அங்கிருந்த இரும்பு வேகத் தடைகளை இடித்து தள்ளிவிட்டுச் சென்றது.

அப்போது டாக்ஸியைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிரில் நின்ற நாகேந்தர் மற்றும் பிரஹலாத் மீது அந்த டாக்ஸி வேகமாக மோதியதில் அதே இடத்தில் இருவரும் பலியானார்கள்.

இதில் படுகாயமடைந்த கப்தான் சிங் அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்ஸியில் சிக்கிக் கொண்ட கப்தான், சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அங்கிருந்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநர் ஹேமந்த் குமார், சிறிது தொலைவில் இருந்த போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். காஜியாபாத்தை சேர்ந்த ஹேமந்த் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்தபோது அவர் மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x