Published : 03 Dec 2014 10:45 AM
Last Updated : 03 Dec 2014 10:45 AM
பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக உருவாக்கப்பட உள்ள புதிய கூட்டணியின் செயல்திட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) டெல்லியில் முடிவுசெய்யப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மீரட்டில் நேற்று முன்தினம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
புதிய கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் இல்லத்தில் வரும் 4-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.
இதில் புதிய கூட்டணியின் பெயர், அதன் இடம்பெறும் உறுப்பு கட்சிகள், அதன் நிலை போன்றவை பற்றி விவாதிக்கப்படும்.
பொதுவான கொள்கை கொண்டவர்களை ஒன்று திரட்டுவதே கூட்டணியின் நோக்கம். நடுத்தர மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இந்தக் கூட்டணி திகழும்.
இதில் ராஷ்ட்ரிய லோக் தளம் இணையுமா என்பதை அந்தக் கட்சியின் தலைவர் அஜித் சிங்தான் முடிவு செய்யவேண்டும். மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பாஜக முயற்சிக்கிறது. விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பின்மை பற்றியெல்லாம் மத்திய அரசுக்கு கவலை இல்லை. இவ்வாறு யாதவ் கூறினார்.
ஜக்கிய ஜனதா தளம் பொதுச்செயலர் கே,சி.தியாகி கூறும்போது, “டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் அபய் சவுதாலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள்.
சமாஜ்வாதி ஜனதா தளம் என புதிய கூட்டணிக்கு பெயர் வைக்கப்படக்கூடும். அதன் தலைவராக முலாயம் சிங்கை நியமிக்கவும் பேச்சு நடக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT