Last Updated : 14 Jul, 2019 08:10 AM

 

Published : 14 Jul 2019 08:10 AM
Last Updated : 14 Jul 2019 08:10 AM

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோற்பார்: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேட்டி

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ், மஜத தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதை தடுக்கும் வகையில், பெங்களூருவை அடுத்துள்ள எலஹங்காவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்க‌ளுடன் எடியூரப்பா நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:குமாரசாமி அரசுக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த போதே அவர் பெரும்பான்மையை இழந்துவிட்டார். தார்மீக ரீதியில் முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். காலம் கடந்த பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நாங்களும் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாராக இருக்கிறோம். வருகிற செவ்வாய்க்கிழமை 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்னதாக, திங்கள்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். பாஜக சார்பில் இதனை சட்டப்பேரவை தலைவரிடம் வலியுறுத்த இருக்கிறோம்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி நிச்சயம் தோல்வி அடைவார். அதற்குள் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி விடலாம் என அவர் நினைக்கிறார். ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் குமாரசாமிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். பாஜகவுக்கு 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சேர்த்து 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. தற்போதைய அரசியல் சூழல் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சித்தராமையா நம்பிக்கை

முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா கூறுகையில், ‘‘ காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான், நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினோம். வாக்கெடுப்பில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜகவுக்குள் கோஷ்டி பூசல் நிலவுவதால் எடியூரப்பா கவலையில் இருக்கிறார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x