Published : 11 Jul 2019 12:12 PM
Last Updated : 11 Jul 2019 12:12 PM

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வந்த எஸ்.மசூத் உசேன் கடந்த ஜூலை 1-ம் தேதி ஓய்வு பெற்றார். காவிரி நதி நீரைப் பங்கீடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, மேகேதாட்டு அணை விவகாரம் தீவிரமாகியுள்ள நிலையில் அடுத்த தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு நிறைவேற்றாத நிலையில் புதிய தலைவர் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

அதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறையின் செயலர் சஞ்சய் சிங் சவுஹான் வெளியிட்ட ஆணையில், ''மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.'' என அறிவிக்கப்பட்டிருந்தது.

மரபுப்படி,  மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரே,காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் நீடிப்பார். ஆனால் இதை எதிர்த்த தமிழக அரசு, நீர்வள ஆணையத்தின் தலைவர் அல்லாத ஒருவரை, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண்குமார் சின்ஹா கடந்த 1983-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தில் நீர்ப்பாசனத்துறை பொறியாளராக பணியாற்றினார். அதை தொடர்ந்து நீர்வள ஆணையத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், வெள்ளக் கட்டுப்பாட்டு இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x