Published : 07 Jul 2019 12:00 AM
Last Updated : 07 Jul 2019 12:00 AM
ஆளுநர் அழைப்பு விடுத்தால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என அந்த கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் குமாரசாமியின் அரசு கவிழும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரவிந்த் லிம்பாவள்ளி, உமேஷ் கத்தி, ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக அரசியலில் நடந்து வரும் விஷயங்களை கவனித்து வருகிறேன். அதுபற்றி எங்கள் கட்சியின் மேலிடத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளிடம் பேசி வருகிறேன். தேர்தல் வந்தால் சுமைதான்விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழலில் எந்த முடிவையும் உறுதியாக கூற முடியாது. பாஜகவை பொறுத்தவரை மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் தேவையில்லை.
ஓராண்டுக்கு முன்பு தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மீண்டும் தேர்தல் நடத்துவதை மக்கள் விரும்பவில்லை. தேர்தல் என்பதே அரசுக்கு கூடுதல் நிதி சுமைதான். எனவே ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்திப்போம் என கூறமாட்டேன். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததற்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுத்தால் பாஜக ஆட்சி அமைக்கும். தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT