Published : 08 Jul 2019 10:46 AM
Last Updated : 08 Jul 2019 10:46 AM

அமைச்சர் பதவி வழங்க குமாரசாமி தயார்; சமரசத்தை ஏற்க அதிருப்தி எம்எல்ஏக்கள் மறுப்பு: கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்

கர்நாடகாவில் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் குமாரசாமி முன்வந்துள்ளபோதிலும், அதனை ஏற்க அதிருப்தி எம்எல்ஏக்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரசை காப்பாற்றும் முயற்சியாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தள்ளி வைக்க ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் இல்லாததால், ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து தங்களது முடிவை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆட்சியை காப்பாற்றும் வகையில் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவரும், 7 முறை எம்எல்ஏவாக வெற்றிப்பெற்ற ராமலிங்க ரெட்டி, மஜத முன்னாள் மாநில தலைவர் விஷ்வநாத் தங்களது முடிவை மாற்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் விமானம் மூலம் மும்பை சென்றனர். அவர்களுடன் பாஜக எம்எல்ஏ அஷ்வத் நாராயாணா, பாஜக எம்எல்சி பிரசாத் லாட் ஆகியோரும் சென்றனர்.

காங்கிரஸ், மஜத‌வைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள சோபிடெல் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கா சென்ற முதல்வர் குமாரசாமி நேற்றிரவு பெங்களூரு திரும்பினார். உடனடியாக அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கினார். ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவர்களை சமரசம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி ராமலிங்க ரெட்டி உட்பட சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க குமாரசாமி முன் வந்துள்ளார். இதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்கள் சிலரை பதவி விலக செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமரச திட்டத்தை ஏற்க அதிருப்தி எம்எல்ஏக்கள் மறுத்து விட்டனர்.

இதனால் கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி தொடர்கிறது. இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை மழைகால கூட்டத்தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்க வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரச்சினையால் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்தி வைக்க குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x