

கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்க முயன்றதில் சிங்கம், சிறுத்தை, யானை உட்பட 32,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தரவுகளில் பதிவாகியுள்ளது.
தண்டவாளங்களில் வனவிலங்குகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2016-ல் இருந்து 2018-ம் ஆண்டுவரை அதாவது கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே தண்டவாளங்களில் பலியான விலங்குகளைப் பற்றிய தரவுகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2016-ம் ஆண்டு 7,945 விலங்குகள் ரயில் தண்டவாளங்களைக் கடக்க முயன்றபோது பலியாகியுள்ளன. 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 11,683 ஆகவும், 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,625 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதன் படி கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே தண்டவாளங்களில் ரயிலில் மோதி பலியான விலங்குகளில் எண்ணிக்கை 32, 253 ஆகும்.இதில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 3,479 விலங்குகள் பலியாகியுள்ளன.
சமீப ஆண்டுகளாக ரயில் விபத்து குறைந்த நிலையில், வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளைத் தடுக்க வயல்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் வேலிகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.