Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவர் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்திய வழக்கில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. சதார் பஜார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சோம் தத் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒருவர் வீட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் சோம் தத். அங்கிருந்தவரை பலமாக அடித்து உதைத்துள்ளார். அதில் அவர் படுகாயம் அடைந்தார்.
புகாரின் அடிப்படையில் சோம் தத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் சோம் தத் குற்றவாளி என்று கடந்த வாரம் அறிவித்தது. இந்த வழக்கில் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இரவு 8 மணிக்கு, குற்றம் சாட்டப்பட்ட சோம் தத் மற்றும் அவருடைய 50 ஆதரவாளர்கள் பிளாட் எண் 13-க்கு சென்றுள்ளனர். அங்கிருந்தவரை பலமாக அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT