Last Updated : 12 Jul, 2019 08:17 AM

 

Published : 12 Jul 2019 08:17 AM
Last Updated : 12 Jul 2019 08:17 AM

ரூ.127-க்கு சிக்கன், சப்பாத்தி, கேக், வாழை இலை உட்பட ஆன்லைனில் பிரியாணி விற்கும் கைதிகள்

கேரள மாநிலத்தில் உள்ள சிறைச்களில், கைதிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, கோழிக்கறி உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் திருவனந்தபுரம், வையூர் மத்திய சிறைச் சாலைகளில் விற்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் உணவுப் பொருள் விநியோக வர்த்தகத்தை வையூர் மத்திய சிறை அதிகாரிகள் தற்போது அமல்படுத்தி உள்ளனர்.

வையூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைனில் விற்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.127 செலுத்தினால், 300 கிராம் பிரியாணி, கோழிக் கால் வறுவல், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் வாழை இலை வழங்கப்படும் என்று வையூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரியாணியை விநியோகம் செய்வதற்கு ‘ஸ்விக்கி’ நிறுவனத்துடன் சிறை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். கேரள சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை ‘பிரீடம் புட் பேக்டரி’ நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது.

இதுகுறித்து வையூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் நாயர் கூறியதாவது:வையூர் மத்திய சிறையில்தான் முதன் முதலில் கைதிகள் தயாரித்த சப்பாத்திகளை, வர்த்தக ரீதியாக கடந்த 2011-ம் ஆண்டு விற்க தொடங்கினோம். ஆன்லைனில் விற்கும் யோசனையை சிறை துறை டிஜிபி ரிஷிராஜ் சிங்தான் தெரிவித்தார். அதன்படி, ஆன்லைன் விற்பனையைத் தொடங்கிவிட்டோம்.

கவுன்ட்டர்களிலும் விற்பனை நடக்கிறது. தவிர ஆன்லைன் விற்பனையை வையூர் சிறையில் இருந்து 6 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு ஸ்விக்கி மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வையூர் சிறையில் தினமும் 25 ஆயிரம் சப்பாத்திகள், 500 பேருக்கான பிரியாணியை 100 கைதிகள் தயாரிக்கின்றனர்.

இவ்வாறு நிர்மலானந்தன் நாயர் கூறினார்.

சிறைக் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x