Published : 10 Jul 2019 12:45 PM
Last Updated : 10 Jul 2019 12:45 PM
மாநிலங்களவையில் இன்று கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமா கடித்ததை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. 8 எம்எல்ஏக்கள் கடிதம் முறையின்றி இருப்பதால் தன்னால்கடித்ததை ஏற்க முடியாது, 5 எம்எல்ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 13 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து விவாதக்க திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர். இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவையில் கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.கள் கோஷம் எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த அவைத் தலைவர் முயன்றார். ஆனால் அவர்கள் விடாமல் கோஷம் எழுப்பினர். கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT