Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM

தெலுங்கு தேசம் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ஆந்திராவில் தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் என்னை 7 முறை எம்எல்ஏவாக தொடர்ந்து வெற்றி பெறச் செய்த குப்பம் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பலமுறை இங்கு பிரச்சாரத்துக்கு கூட வந்தது கிடையாது. இருந்தபோதிலும், என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள்.

தற்போது நாம் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், மக்களின் பக்கம் நின்று நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

இந்த அரசானது, தெலுங்கு தேசம் தொண்டர்கள், நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நமது கட்சியைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

குப்பம் தொகுதியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் வேண்டும். அதுவரை நான் போராடுவேன். தேர்தல் தோல்வி குறித்து நாம் ஆராய வேண்டும். அதில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கு தேசம் ஏழைகளின் கட்சி. என்.டி. ராமாராவ் தொடங்கிய கட்சி. தெலுங்கர்களின் ஆத்ம கவுரவத்தை காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட கட்சி. நமது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும். இதற்கு உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் தேவை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x