Published : 10 Jul 2019 10:16 AM
Last Updated : 10 Jul 2019 10:16 AM
கர்நாடக காங்கிரஸ் மூத்ததலைவரும், சிவாஜி நகர்எம்எல்ஏ-வுமான ரோஷன் பெய்க் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஓராண்டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி, தன்வீர் சேட் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள் கூட்டணி அரசை பகிரங்கமாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் ரோஷன் பெய்க் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான வேளையில், “கர்நாடகாவில் காங்கிரஸின் தோல்விக்கு சித்தராமையாதான் காரணம். மாநில தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு அரசியல் தெரியாததால் தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டார்'' என கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரோஷன் பெய்க், டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்க முடியாததால் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் ரோஷன் பெய்க் நேற்று பெங்களூருவில் சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.
பின்னர் ரோஷன் பெய்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருக்கிறேன். ஆனால் காங்கிரஸில் உரிய மதிப்பு கிடைக்கவில்லை. இந்த கூட்டணி ஆட்சி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. எனவே எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பேரவைத் தலைவரிடம் தெரிவித்தேன். அவரும் ராஜினாமா கடிதத்தை வாங்கி கொண்டார்.
நான் டெல்லிக்கோ, மும்பைக்கோ செல்ல மாட்டேன்.
அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் நட்புரீதியாக பேசினேன். பாஜகவில் இணைவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்றார்.
ரோஷன் பெய்கின் ராஜினாமா அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காங்கிரஸில் இருந்து விலகி, விரைவில் பாஜகவில் இணைவார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT