Published : 13 Jul 2019 01:30 PM
Last Updated : 13 Jul 2019 01:30 PM
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்டம்பரில் 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை நடைபெறுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் பிரதிநிதிகளும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இதில் பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு அமர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, செப்டம்பர் 22-ம் தேதி ஹூஸ்டன் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதுகுறித்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள ஹூஸ்டன் நகரம், உலகின் எரிசக்தி தலைநகர் என்று வர்ணிக்கப்படுகிறது.
பிரதமரின் பயணத் திட்டம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அதுபோலவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திப்பு ஹூஸ்டன் நகரில் நடைபெறுமா அல்லது சிகாகோவில் நடைபெறுமா என்பதையும் இன்னமும் முடிவு செய்யவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்தவுடன் ஏற்பாடுகள் செய்யப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டில் பிரதமரான பின்னர் இரண்டு முறை அமெரிக்கா சென்று அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT