Published : 08 Jul 2019 03:14 PM
Last Updated : 08 Jul 2019 03:14 PM
நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி தரும் விதத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் அனைத்தும் 2019-20 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 32 லட்சத்து 38 ஆயிரத்து 397. இது 2019,மார்ச் 1-ம் தேதி 36 லட்சத்து 19 ஆயிரத்து 596 ஆக அதிகிரித்துள்ளது. அதாவது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 199 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக ரயில்வே துறையில் 98 ஆயிரத்து 999 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். கடந்த 2017 மார்ச்சில் ரயில்வேயில் 12.70 லட்சம் ஊழியர்கள் இருந்த நிலையில், 2019, மார்ச் 1-ம் தேதி 13.69லட்சமாக உயர்ந்துள்ளது.
காவல் துறையில் 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறைமுக வரித்துறையில் 53 ஆயிரம் வேலைவாய்ப்புகளும், நேர்முக வரித்துறையில் 29 ஆயிரத்து 935 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு 42 ஆயிரத்து 370 வாய்ப்புகள் இருந்த நிலையில் 2 ஆண்டுகளில் 46 ஆயிரத்து 347 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அணுசக்தித் துறையில் 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளும், தொலைத்தொடர்புத் துறையில் 2,250, நீர்வளத்துறையில் 3,981 பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் 7 ஆயிரத்து 743 பேரும், சுரங்கத்துறையில் 6 ஆயிரத்து 338 பேரும், விண்வெளித்துறையில் 2,290 பேரும் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றனர். பணியாளர் துறையில் 2,056 பேரும், வெளியுறவுத்துறையில் 1,833 பேரும் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றனர்.
மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் 3,647 பேரும், வேளாண் துறையில் 1,835 பேரும், விமானப் போக்குவரத்து துறையில் 1,189 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT