Published : 12 Jul 2019 02:03 PM
Last Updated : 12 Jul 2019 02:03 PM

காங்கிரஸுக்கு இடைக்கால தலைவர் யார்? - விரைவில் கூடுகிறது காரிய கமிட்டி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி 7 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் காரியக்கமிட்டி விரைவில் கூடி இடைக்கால தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2014-ம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். காரியக் கமிட்டி கூடி அடுத்த தலைவரை தேர்தெடுக்கும் எனத் தெரிகிறது. ராகுல் காந்தியின் முடிவை ஆதரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இருப்பினும் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் இன்னமும் இழுபறி நீடித்து வருகிறது. இளம் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர். அதேசமயம் தலைவர் பதவியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இருப்பது சரியாக இருக்கும் என வேறு சிலர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக சோனியா காந்தியை தலைவராக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அவர் தலைவர் பதவியை ஏற்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஷ்னிக், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர்களில் ஒருவரை தற்காலிகமாக தலைவர் அல்லது செயல் தலைவராக்கலாம் என பரிந்துரைகள் வந்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் கூடி இதுபற்றி விவாதித்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் எனத் தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x