Published : 01 Jul 2019 06:47 PM
Last Updated : 01 Jul 2019 06:47 PM
அனைத்து தனியார் பள்ளிகள், சிறப்புப் பிரிவு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு அல்லது அதற்கும் கீழ் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்குவது கட்டாயம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேசியதாவது:
''கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தச் சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி உரிமையாக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டப் பிரிவு 12-ன்படி, அனைத்து தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பிரிவு பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு அதற்கும் குறைவான வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கி, அவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று பிரிவு 12(1)சி-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது கல்வி என்பது மத்தியப் பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகளாலும், யூனியன் பிரதேசங்களாலும் நடத்தப்படுகிறது. ஆதலால், ஆர்டிஇ சட்டத்தை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு போக்ரியால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT