Published : 04 Jul 2019 04:21 PM
Last Updated : 04 Jul 2019 04:21 PM
வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் எண்களுக்கு ஆதார் பெறுவதை சட்டபூர்வமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆதார் அட்டையே தேவையா இல்லையா என்ற கேள்விகளும் விவாதங்களும் உருவாகி அடங்கியுள்ள நிலையில் இன்று ஆதார் அட்டையின் அவசியம் குறித்த சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இன்று அதற்கான மசோதாவை மத்திய மின்னணு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மொபைல் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் பயோமெட்ரிக் ஆதார் அட்டையை தானாக முன்வந்து இணைப்பதற்கான சட்டபூர்வமான ஆதரவை வழங்குவதற்கான திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி வியாழக்கிழமை அரசாங்கத்தை விமர்சித்தது.
மக்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் அவசர சட்டத்தை பயன்படுத்தியது என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த உத்தரவு கடந்த அரசாங்கத்தால் (2014-19 முதல்) பிறப்பிக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதை ஒரு சட்டமாக கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
''இந்த அரசாங்கம் எந்தவொரு காரண காரியமுமின்றி ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் கட்டளை வழியை நாடுகிறது'' என்று குறிப்பிட்டு பேசிய சவுத்ரி, ஆதாரில் தனியுரிமையை மீறியதற்காக உச்சநீதிமன்றமும் அரசாங்கத்தை கண்டித்ததையும் நினைவுகூர்ந்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய ரவிசங்கர் பிரசாத், “உங்கள் அரசாங்கத்தின் கீழ் (யுபிஏ), ஆதார் எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாங்கள் அதற்காக ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளோம். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நேரடி நன்மை பரிமாற்றம் (டிபிடி) மூலம் ரூ .7.84 லட்சம் கோடி அனுப்பப்பட்டுள்ளது. மத்தியதரவர்க்க குடும்பத் தலைவர்களுக்கு கிட்டத்தட்ட 1.41 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. 123.81 கோடி மக்கள் ஆதார் அட்டைகளை வைத்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 6.91 கோடி வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத தெரிவித்தார்.
இந்த மசோதா கடந்த திங்கட்கிழமை அமைச்சரால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்பட்ட மசோதா ஆகும்.
கடும் தண்டனை
இந்த மசோதாவில், ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குற்றப்பிரிவுகளின்கீழ் தண்டனைகள் விதிக்கப்படும். அது மட்டுமின்றி ஆதார் பயனாளிகளின் தனியுரிமையில் ஊடுருவி ரகசியங்களை திருடுவோருக்கும் கடுமையான தண்டனைகளை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT