Published : 12 Jul 2019 06:03 PM
Last Updated : 12 Jul 2019 06:03 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இஸ்லாமியப் பள்ளியான மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் அமைப்பினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட வலியுறுத்தி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று ஜூலை 11ம் தேதி நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது ஜெய்ஸ்ரீராம் என்று கூறவைக்கப்பட்டனர், பிறகு திரும்பவும் கூற வலியுறுத்தப்பட்டப் போது மாணவர்கள் மறுத்துள்ளனர் இதனையடுத்து இவர்களை அடித்து உதைத்து அவர்களின் உடைகளை கிழித்து நாசம் செய்த கும்பல் அவர்களின் சைக்கிள்களையும் சேதப்படுத்தி பள்ளியைச் சூறையாடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மதியத் தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது 4 பேர் இவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது தொடர்பாக வம்புக்கு இழுத்துள்ளனர். இதில் கடைசியில் மாணவர்களை அடித்து உதைத்து ஜெய் ஸ்ரீராம் சொல் என்று வலுக்கட்டாயப் படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கிழிந்த உடைகளுடன் மாணவர்கள் மதரஸாவுக்கு வந்து நடந்ததை விவரித்துள்ளனர். போலீஸ் பிறகு வந்தது, நடந்ததை குறிப்பெடுத்துக் கொண்டது அவ்வளவே.
போலீஸார் பிறகு வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரை அவர்களது முகநூல் முகவரியைக் கொண்டு கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கள் சமூகவலைத்தளங்களில் தங்களை பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். சர்க்கிள் ஆபீசர் உமேஷ் தியாகி இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
உ.பி.யில் இத்தகைய வன்முறை ஒன்றும் புதிதல்ல, யோகி ஆதித்யநாத் அரசு இதனைக் கண்டு கொள்வதில்லை. பெயருக்கு நடவடிக்கை எடுப்பதாக இமாம்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த ஜூலை 4ம் தேதி ஆட்டொ ஓட்டுநர் மொகமத் ஆடிப் என்பவரை பாத்ரூமில் வைத்து கல்லால் அடித்துள்ளனர், காரணம் அவர் ஜெய்ஸ்ரீராம் உச்சரிக்க மறுத்தார் என்பதே. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாகவும் மதரசாவிலிருந்து திரும்பி கொண்டிருந்த முஸ்லிம் தாஜ் முகமதுவுக்கும் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT